×

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‘‘மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லா நிலை உருவாக்குவோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “உலக எய்ட்ஸ் நாள்” செய்தியில் கூறியிருப்பதாவது:
எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள்(இன்று) உலக எய்ட்ஸ் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் “சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்“ என்பதாகும். பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் கருதி “தமிழ்நாடு அரசு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை”2009-10ல் துவக்கப்பட்டு – இதுவரை 25 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடமிருந்து நிதி பெறப்பட்டு-பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச் சத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாநில அரசும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபாட்டுடன் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தியமையால் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.17 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.22 விழுக்காட்டை விடக் குறைவானதாகும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதலைக் குறைக்கும் மகத்தான நோக்கத்துடன், சமூக மற்றும் மெய்நிகர் ஊடகத்தின் வாயிலாகவும், இணையதளம், கைபேசி, வானொலி, சுவரோவியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நேரடி மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளின் மூலமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே லட்சியமாக ஏற்று பயணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லா நிலையை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...